ஒரு பெருங்கவிஞனின் சாத்தியங்கள் எதுவெனில்...

பெருங்கவிஞனொருவன்
அங்காரப் பேயைப் போல
தலைவிரித்தாடும் பஞ்சத்திற்கு
பின்னலிட்டு பூ வைத்து விடும் நோக்கில்
டாஸ்மாக்கில் விற்பனையாளனானான்
போதை தலைக்கெறியதும்
அவனது வாடிக்கையாளர்கள் நாக்குழறத் துப்பும்
துயரமும் மகிழ்ச்சியுமான நிகழ்வுகளை
மசால் பொரியும் சோடா மூடிகளும்
சிதறிக் கிடக்கும் மேசைகளிலிருந்து
தேடியெடுத்து கவிதைகள் செய்து கொண்டான்
நாள்தோறும் மிச்சம் பிடித்த
திருடிக் கொண்ட
மதுக் கலவைகளில் தாகசாந்தியடைந்த அவன்
பிறகதை பகல் பொழுதிலும் 
வாடிக்கையாக்கிக் கொண்டான்
அவனின் புளித்த ஏப்பத்தின் வாசமொன்று
நாசிகளுக்கு எட்டி விட
தள்ளாடிக் கொண்டிருந்தவன்
ஒரு புளிய மரத்தினடியில் மல்லாத்தி விடப்பட
அம்மரத்திற்கு விழுதுகள் இல்லாதது குறித்து
யோசித்தபடியே உறங்கிப் போனான்
 ஏதேச்சையாய் ஒருநாள் சந்தித்த போது
காரணம் கேட்க
ஒரு கவிஞனால் எப்போதும்
கவுண்டருக்கு வெளியில்தான் நிற்க முடிகிறது - என்றபடி
மீதமிருந்த மிடறுகளைக் குடித்தபடி நகர்ந்தான்

Comments