ஆதிராவும் பிரபஞ்சத்தின் புதிர்களும்

உறக்கம் விநியோகமாகியிருக்கத் துவங்கியிருந்த
முன்னிரவுகளில்
விரல் பிடித்தபடி
கழிமுகத்தில் அலைவது
ஆதிராவுக்கு பிடித்தமான ஒன்று
ஆசையும் பயமுமாய்
அலைகளோடான விளையாட்டு
அவள் அம்மாவின்
அலைபேசி அழைப்பில் தான் கலையும்
வீடு திரும்புகையில்
என் விரல் மோதிரத்தைத் திருகியபடி கேட்பாள்

‘‘ இருட்டுக்குள்ளர்ந்து எப்புடி அல வரும்”


“ இந்தக் கடல்ல இருந்து தான்

நன்னீமா வீட்டு பக்கம் ஆறு வருதா”

புன்னகையை மட்டுமே பதிலாக்குவேன்


ஒரு ஞாயிறு மாலையில்

அவளே புரிந்து கொள்ளட்டுமென
கடலின் விஸ்தீரணத்தின் முன் அமர்த்தினேன்
சற்று நேரம் திகைக்குப் போனவள்
ஆச்சர்யத்தோடு திரும்பிக் கேட்டாள்

“ அப்பா, இங்கிருக்கர வானத்திலிருந்தும் தண்ணி வருது

நம்ம வீட்டு வானத்துல இருந்தும் மழத்தண்ணி வருது
எல்லாத் தண்ணியும் எங்கிருந்துப்பா வரும்.?”

Comments